Skip to main content

அனுதாபம் தேடுகிறார் சசிகலா... கே.சி.பழனிசாமி பேட்டி!

Published on 05/03/2021 | Edited on 06/03/2021

 

Sasikala seeks sympathy says kcp palanisamy

 

தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்ட சசிகலா, கடந்த 03.03.2021 அன்று, அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து, அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

 

சசிகலாவின் 'அரசியல் விலகல்' அறிவிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


சசிகலாவின் இந்த 'அரசியல் விலகல்' அறிவிப்பில், பிளவுபட்ட கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் நினைத்தது போலத் தெரியவில்லை. அப்படி நினைத்திருந்தால், அவர் ஜானகி அம்மா போல முடிவெடுத்திருப்பார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக 'ஜா' அணி, 'ஜெ' அணி என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது.

 

அப்போது, ஜானகி அம்மா கட்சியை ஒன்றாக்கிவிட்டு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதுபோல, சசிகலா கட்சியை ஒன்றிணைத்துவிட்டு விலகுகிறேன் எனச் சொல்லவில்லை. இதற்கு நேர்மாறாக, தொடர்ந்து நான் அமமுகவை வழிநடத்துவேன் என தினகரன் சொல்லி வருகிறார்.

 

ஒன்றை யோசித்துப் பாருங்கள், பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி தமிழகம் வரும்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு உரிமை கோரும் அவரது வழக்கு தீவிரப்படுத்தப்பட்டது. உடனே எந்தக் காரியத்திலும் இறங்காத சசிகலா, சில காலம் அமைதிகாத்தார்.

 

அதன்பிறகு, ஜெயலலிதா பிறந்த நாளின் போது சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தார். பரபரப்பாக இயங்கப் போகிறார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், திடீரென்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவிக்கிறார். ஏன் இத்தனை குழப்படிகள்?

 

நான் இதை வேறுசில கோணங்களில் பார்க்கிறேன்,

 

ஒன்று, 'பாஜக- ஒ.பி.எஸ்.- இ.பி.எஸ்' தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அல்லது, இந்த 'அரசியல் விலகல்' அறிவிப்பின் மூலம், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அனுதாபத்தை அடைய முயற்சித்திருக்கலாம். ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் போனால், அதன் தோல்விக்கு நாம் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூட அவர் நினைத்திருக்கலாம்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு சோனியா அரசியலுக்கு அழைத்து வரப்பட்டதைப் போல, அதிமுகவின் தோல்விக்குப் பிறகு தனது தலைமையை அனைவரும் ஏற்பார்கள் என்று கருதியிருக்கலாம். இப்படிப் பல கோணங்களில் நான் யோசிக்கக் காரணம் இருக்கிறது. உண்மையாகவே, அதிமுக எனும் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் நினைத்திருந்தால், அதிமுகவுடன் தினகரனை இணைத்திருக்க வேண்டும். அதை, அவர் செய்யவுமில்லை அமமுகவை கலைக்கவும் இல்லை. ஆனால், தினகரன் கட்சி நடத்துவார் நான் ஒதுங்கிக் கொள்கிறேன் எனும் சசிகலாவின் நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?