Skip to main content

மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீர்..! மண்குடிசையில் ரவீந்திரநாத்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

dddd

 

தேனி மாவட்டம் போடி தொகுதிக்குள் வரும் குரங்கனி மலையில் சில வருடங்களுக்கு மலையேற்றப் பயிற்சியின் (டிரெக்கிங்) போது, திடீர் தீவிபத்தால் பலர் கருகி பலியாகினார்கள். அந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின், குரங்கனி மலைப் பகுயில் உள்ள அணைக்கரைப்பட்டி, முந்தல், சிறைகாடு, சோலையூர், மேலபரவு, முதுவாகுடி உள்ளிட்ட பல்வேறு மலைகிராம மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.

 

அதில் குறிப்பாக, முதுவாகுடிக்குச் செல்லும் 6 கி.மீ. தொலைவு ஜீப் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இருந்த குண்டும் குழியுமான சாலையை மூடியது வனத்துறை. இதனால் அங்கு வசிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ரொம்பவே அவதிப்பட்டார்கள். இதனால் கொதிப்படைந்த அந்த மக்கள் கடந்த எம்.பி.தேர்தலைப் புறக்கணித்தனர். தேனி சப்-கலெக்டர் வைத்தியநாதன் குரங்கனியிலிருந்து முதுவாகுடிக்கு 6 கி.மீ நடந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மக்களின் குமுறல்களைக் கலெக்டரிடம் அறிக்கையாக கொடுத்து இரண்டு வருடங்களாகப் போகிறது. ஆனால் அந்த மக்களின் நிலையோ முன்பைவிட மோசம் என்ற நிலைக்குப் போய்விட்டது.

 

அதுசரி, இந்த அவலமெல்லாம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பத்து வருடம் இருக்கும் நம்ம துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குத் தெரியாம இருக்குமா? தெரியும்... ஆனா தெரியாது… என்ற ரீதியில்தான் இருந்தார் பன்னீர்.

 

dddd

 

பிப்.08-ஆம் தேதி சசிகலா தமிழகத்திற்குள் வந்த பிறகு நம்ம பொழப்பு கந்தலாகிவிடும் என்ற பயபீதியில் தொகுதிவாசிகள் மீது திடீரென அக்கறை மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர் பன்னீரும் அவரது மகன்களான எம்.பி.ரவீந்திரநாத்தும் இன்னொரு மகனான பிரதீப்குமாரும்.

 

2011, 2016 தேர்தலின்போது ஓட்டுக் கேட்க முதுவாகுடிக்குச் சென்றதோடு சரி. அதன் பின் அப்படி ஒரு கிராமம் இருப்பதையே மறந்துவிட்டார் பன்னீர். சென்னையிலிருந்து கொண்டு மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து சசிகலாவுக்கு எதிராக மல்லுக்கட்டுவதைவிட, முதுவாகுடி மலையேறுவதே மேல் என்ற நினைப்புடன் கடந்த வாரம் தனது மகன் ரவீந்திரநாத், பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள், சில அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு முதுவாகுடி மலைகிராமத்திற்கு குரங்கனியிலிருந்து நடந்தே போனார். (வேற வழி, அங்கதான் ரோடே இல்லையே) பன்னீர் குழுவினரைப் பார்த்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள் அங்கு தைரியமாக வசிக்கும் பழங்குடியின மக்கள். "நம்புங்க, நான்தாங்க இந்த தொகுதி எம்.எல்.ஏ.'' என மாஸ்க்கிற்குள்ளே சிரித்தபடி முகம் காட்டினார் ஓ.பி.எஸ்.

 

dddd

 

"உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சுக் கொடுக்குறேன், புதுசா ரோடு போட ஏற்பாடு பண்றேன், குரங்கனியிலிருந்து டாப்ஸ்டேசன் வரைக்குமான ரோட்ல ஃபேவர்ப்ளாக் பதிக்கிறேன், அதுக்கு இப்பவே பூமி பூஜை போடுறேன்'' என சொல்லிவிட்டு பூமிபூஜையையும் போட்டார் பன்னீர்.

 

என்னதான் பண்ணினாலும் கையில நாலு காசு கொடுத்தா சரியாயிரும் என்ற கணக்குடன், "இந்தாங்க இடிஞ்சுபோன வீட்டைக் கட்டிக்கங்க'' என சிலருக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். 40 குடும்பங்களுக்கு 61 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

அதற்கடுத்ததாக ஓலைக்குடிசைகள், மண் குடிசைகளில் அப்பாவும் மகனும் உட்கார்ந்து மக்களிடம் பாசமழை பொழிந்தார்கள். மறுபடியும் ஓட்டுக் கேட்டு வருவோம் என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

 

இன்னொரு பக்கமோ,“பார்த்தீங்கல்ல, எங்க அண்ணனை, இந்த வயசுலயும் மலையேறி உங்களப் பார்க்க வந்துருக்காரு'' என பெருமை பீத்திக்கொண்டார்கள்.

 

ஓ.பி.எஸ்.சின் மலையேற்றம் குறித்து தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.லட்சுமணனிடம் பேசியபோது, “எதுக்காக இப்ப வந்துருக்காருன்னு அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும். 2008-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதல்வர் கலைஞரின் உத்தரவுப்படி ஆரம்ப பள்ளிக்கூடம், முதியவர்களுக்கு உதவித்தொகை என பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். அதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை, பன்னீரின் பாராமுகத்தையும் மறக்கவில்லை'' என்றார்.

 

தேனி யூனியன் சேர்மனும் வடக்கு ஒ.செ.வுமான சக்கரவர்த்தி நம்மிடம் பேசும்போது, “பணத்தால மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்குறாரு பன்னீர். ஆனா வரும் தேர்தலில் அது நடக்காது, அவருக்கு வெற்றி வசப்படாது. இப்போது மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீரும், ‘பி.டி.ஆர். கால்வாயில் மடைகட்டித் தருவேன், அதனால் 25 கிராமங்கள் பயனடையும்’னு சொன்னார். ஆனால் அதற்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கல. பன்னீரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தைப் பத்தியும் இந்தத் தொகுதி மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்'' என்றார். தேர்தல் நெருக்கத்தில் என்னென்ன வித்தைகளெல்லாம் காட்டப் போகிறார்களோ பன்னீர் & சன்ஸ்.

 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.