Skip to main content

தோற்பவர்களின் வெற்றி - இரோம் ஷர்மிளா!

Published on 14/03/2018 | Edited on 15/03/2018

இரோம் ஷர்மிளா பிறந்த நாள் 

அரசியல்வாதிகளின் உண்ணாவிரத போராட்டம் என்பது கிட்டத்தட்ட கேலிக்கூத்தாகவே ஆகிவிட்டது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நடந்த உண்ணாவிரத போராட்டங்கள் பல. ஒரு பக்கம் போராட்டங்கள் இப்படி இருக்கையில், ஜல்லிக்கட்டுப்  போராட்டம், மஹாராஷ்டிராவில் நடந்த விவசாயிகள் போராட்டம் போன்றவை மக்கள் போராட்டத்திற்கான பலத்தையும், பெயரையும் அழியாமல் தக்கவைத்திருக்கின்றன. 
 

irom sharmila


போராட்டங்களின் நிலை இப்படி எல்லாம் இருக்கையில், 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தங்கள் மாநிலத்தில் நடக்கும் அக்கிரமங்களுக்காக குரல் கொடுக்கும் வகையில், மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து ஒரு பெண்மணி உண்ணாவிரதப்  போராட்டத்தில் இறங்கினார். உண்மையில் ஆகார உணவுகளும் தண்ணீரும் எடுத்துக்கொள்ள சம்மதிக்கவில்லை, இருந்தாலும் அரசின் சார்பில் வலுக்கட்டாயமாக அவரின் நாசியில் ட்யூப் பொருத்தி தினசரி 1600 கலோரிகள் நீராகாரமாய் கொடுத்தனர். அவரும் போராட்டத்தை கைவிட்டுவிடுவார் என்று முதலில் தப்புக்கணக்கு போட்டவர்களை தவறாக்கும் விதமாக அவரது நோக்கமும் போராட்டமும் உறுதியாக இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில்தான் இந்தப் போராட்டம் நடந்தேறியது. இந்தப்  போராட்டம் என்பது அவர் மாநிலத்திற்காக மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரேதசம், மணிப்பூர், அஸாம், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, திரிபுரா இவற்றிற்கும் சேர்த்துதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். 
 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 'ஆர்ம்ட் போர்ஸ் ஸ்பெஷல் பவர்' (ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்) என்னும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1953ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டம் போகப் போக 1958 ஆம் ஆண்டு ஏழு தங்கைகள் என்று சொல்லப்படும் அந்த மாநிலங்கள் தனித்துவமான பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு இந்த சட்டத்தை கொண்டுவந்தனர். இது அங்கு ராணுவத்தின் அராஜகத்திற்கும் வழிவகுத்தது. மக்கள் பல விதங்களிலும் துன்புறுத்தப்பட்டனர்.   விளையாட்டுப் போக்கில் மக்களை சுட்டுத் தள்ளினர். மணிப்பூரில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை ஏன் எதற்கு என்றெல்லாம் விசாரிக்காமல் சுட்டுத்தள்ளினர். இது மலோம் படுகொலை என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டம் இந்தியாவில் இருக்கும் இந்த ஏழு மாநிலங்களில் மட்டும் இல்லை, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் 1983 ஆம் ஆண்டு முதல் பதினான்கு வருடங்கள் இருந்தது. 1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டு இன்றுவரை நீடித்துக்கொண்டே வருகிறது. 

 

irom sharmila


மலோம் படுகொலைக்குப் பின்னர்தான் அந்தப் பெண்மணி போராட்டத்தில் இறங்கினார். அப்போது அவருக்கு இருபத்தியெட்டு வயதே ஆகியிருந்தது. காதல், கல்யாணம் வேலை, படிப்பு போன்று எதிலும் திசை திருப்பப்படாமல், மக்களின் மனித உரிமைக்காக போராடத் தொடங்கினார். போராட்டம் நீண்டுகொண்டே இருந்தது. திடீரென போலீஸாரால் கைது செய்யயப்படுவார், விடுதலையாவார். இதுபோன்று பதினாறு வருடம் வரை அவரது போராட்டம் நீடித்தது. இருந்தும் இந்த அரசாங்கம் மசியவில்லை, வேறு என்ன வழி என்று யோசிக்க, மக்களுக்காகப் போராடினால் மட்டும் போதாது. அந்த சட்டத்தை நிராகரிக்கக் கூடிய பதவிக்கு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அவரது போராட்டத்தை தேன் சாப்பிட்டு முடித்துக்கொண்டார். 'அவரது இத்தனை வருட போராட்டம் வீண் போனது', 'அவரின் நோக்கம் நிறைவேறவில்லை. இருந்தாலும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அரசியலுக்கு வருகிறார், அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது', என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.  இந்தப்  போராட்டத்தை அவர் கைவிட இன்னுமொரு காரணம் அவரது காதலன் என்றனர். 
 

அரசியலுக்கு வருவதற்காக புது கட்சியைத் தொடங்கினார். மூன்று முறை முதலமைச்சரான இபோபி சிங்கை எதிர்த்து களத்தில் இறங்கினார். தேர்தலுக்கான வாக்குறுதியாக, "மனித உரிமைகளும்  மனிதாபிமானமும் மரணிக்காமல் இருக்க போராடுவேன்", என்றார். ஆனால், அவரது பதினாறு வருட போராட்டத்திற்கு 90 வாக்குகள் மட்டுமே அளிக்க முடியும் என்று மக்கள் முடிவு செய்தனர். அடுத்த வருடமே நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார். போராட்டங்களெல்லாம் போதும், என்னை காதலித்த என் காதலன் போதும் என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டார் போல. தற்போது தன் கணவருடன் கேரளாவில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
 

தீவிரவாதம் என்னும் ஒற்றை வாதத்தை வைத்துக்கொண்டு பொது மக்களையும் சுட்டுத் தள்ளிய, துன்புறுத்திய அதிகாரத்தை எதிர்த்து,    இதன் பேரில்  ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தையே ஒடுக்கியதை எதிர்த்து உணவும் நீரும்  இன்றி உண்மையாக பதினாறு வருடங்கள் போராடி தோல்வியை கண்டார். இவரது போராட்டத்திலும் தேர்தல் அரசியலிலும் இவர் தோற்றிருக்கலாம். ஆனால், எந்தப் பின்புலமும், அரசியல் இயக்கங்களும், பெருங்கூட்டமும் இல்லாமல் அநீதியை எதிர்த்து ஒரு தனி உயிரும் குரல் கொடுக்க முடியும் என்று அத்தகைய போராட்ட மனம் கொண்ட ஒவ்வொருவருக்கும் உத்வேகமளித்தவர் என்ற முறையில் வெற்றிபெற்றவர்  இந்த இரும்பு மனிதி இரோம் சர்மிளா.  

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம்; பயந்ததா பாஜக? 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Elections also unface Manipur; Why bjp afraid?

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் அந்த மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக  மேகாலயாவில் இரண்டு தொகுதியிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே மணிப்பூரில் நிகழ்ந்த கலவரம் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்த நிலையில் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் போட்டியிடாமல் மாநில கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி இந்த தகவலை பகிர்வதாக வடகிழக்கு மாநிலங்களின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சம்பித் பத்ரா சமூக வலைத்தளமான எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் மோடி வந்து சேரவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில்  பயம் காரணமாக தேர்தலிலும் மணிப்பூருக்கு பாராமுகம் காட்டியுள்ளார் மோடி என விமர்சனங்கள் எழுந்துள்ளது.