Skip to main content

ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டுவது என்பது சாத்தியமான ஒன்றா..? - பதிலளிக்கிறார் ஜியோ.டாமின்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

fg


சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பியது. அந்தப் படத்தில் எதிரிகள் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளைப் பரப்பி நிலங்களில் உள்ள பயிர்கள் முழுவதும் அழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
 


சினிமாவில் இடம்பெற்ற அந்தக் காட்சிகளைப் போலவே தற்போது வட மாநிலங்களில் நேரடியாக நடந்து வரும் சம்பவங்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபை பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா நாடுகளைப் பாதித்த அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியா வந்துள்ளன. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் ஏன் கூட்டம் கூட்டமாக வருகின்றது, எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ. டாமின். 

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு ராஜஸ்தான் பகுதிகளில் இது நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பித்து பாகிஸ்தான் வழியாகத் தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகள் புகுந்துள்ளன. வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அதன் தாக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்புக்கு என்ன காரணம், எதனால் இது ஏற்படுகின்றது? 
 


வெட்டுக்கிளிகளின் பூர்விகம் என்று பார்த்தால் வட கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைச் சொல்லலாம். இந்த வெட்டுக்கிளிகள் எல்லாம் நம்முடைய விளை நிலங்களில் எப்படி நான்கு ஐந்து வெட்டுக்கிளிகள் நிலத்தைச் சேதப்படுத்துமோ அந்த வகையான வெட்டுக்கிளிகள் தான் இவை. இது அனைத்தும் எப்போது அதிரடியாக ஒன்று கூடுகிறது என்றால் கடுமையான வறட்சி ஏற்படுகின்ற போது பசுமையான பகுதிகளை நோக்கி தனித்தனியாக இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்கின்றன. இதனால் அவைகள் கூட்டம் கூட்டமாக நமக்குத் தெரிகின்றன. அப்படி அவைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தாவரங்களைச் சேதப்படுத்துகின்ற போது 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருள் வெட்டுக்கிளிகளில் உற்பத்தி ஆகின்றது. அந்த வேதிப்பொருட்கள்தான் இந்த வெட்டுக்கிளிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது. 

இதைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கூறி வருகிறார்கள். குறிப்பிட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தி அந்த சவுண்ட் மூலம் வெட்டுக்கிளிகளை விரட்டலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது முதலில் சாத்தியப்படுமா என்று பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சென்ட் இடத்தில் பயிரிட்டு இருந்தால் நாம் ஒலி எழுப்பினால் அது அந்த அதிர்ச்சியில் வெட்டுக்கிளிகள் ஓடி விடும் எனலாம். ஆனால் அது பலசதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் வரும்போது அவைகளை விரட்டுவது எனபது மிகவும் சாத்தியம் குறைவான ஒன்று. அதுவும் அந்த சவுண்ட் வேவ்ஸ் என்பது கூட ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து அந்த வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்த மட்டுமே பயன்படுமே தவிர அதை அழித்துவிட முடியாது. எனவே இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன" என்றார்.