Skip to main content

மணிப்பூர் எரிகிறது; பாதுகாப்புத் துறை அமைச்சர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கேட்கிறார் - அமுதரசன்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

 Defense Minister asks for opportunity to form government in Tamil Nadu - Amudharasan

 

சென்னை, தாம்பரத்தில் நடந்த பாஜக ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், “தமிழகத்தில் ஒரு முறை  எங்களை ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற ஆட்சியை தருவோம். செந்தில் பாலாஜி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்” என்று பேசியிருந்தார். 

 

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன், “ஒரு பாதுகாப்பு அமைச்சர் செய்யக்கூடிய வேலையை அவர் பார்க்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் 45 நாட்களுக்கு மேலாகவும் மக்கள் உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள். அங்கு திட்டமிட்டு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ராணுவத்தை இறக்கியும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

 

சாதி, மதக் கலவரத்தை பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர். பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மணிப்பூரில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆனால், நாட்டினுடைய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் அனைவரும் அமைதியாக இருந்து மெளனம் காத்து வருகின்றனர்.

 

இப்படி நாட்டில் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கையில் ஒரு பாதுகாப்புத் துறை அமைச்சர் இங்கு தாம்பரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் கையில் நாட்டை கொடுத்ததன் விளைவு தான் இன்று நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

 

அதுபோலவே தமிழ்நாட்டையும் கெடுக்க பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு போதும் அந்த பூவை மலர வைக்க மாட்டார்கள். அது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் நிரூபித்து கொண்டிருக்கிறோம். வரவிருக்கும் தேர்தலிலும் நிரூபித்து காட்டுவோம்” என்றார். 

 

மேலும் அவரிடம், நீதிமன்றத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  சார்பாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டது என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர், “அமலாக்கத்துறை அமைப்பு, புலனாய்வு அமைப்பாக இல்லாமல் பாஜகவுடைய கூலிப்படை அமைப்பாக இருந்து வருகிறது என்று உச்சநீதி மன்றமே அவர்களை தலையில் கொட்டி அனுப்பிவிட்டார்கள். 

 

செந்தில் பாலாஜி முறையற்ற கைது என்ற வாதத்தில், அவரை நீதிமன்ற காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். திமுக சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அமலாக்கத்துறையின் வழக்கறிஞர்கள் புறமுதுகு காட்டி ஓடியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், திமுக தரப்பில் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற எங்களுக்கு சில காலம் வேண்டும் என அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் அமலாக்கத்துறையினர் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.