Skip to main content

தலைவராக தந்தை பெரியார் ….

Published on 05/02/2019 | Edited on 09/02/2019

அரசியல் தலைவர்களில் தலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டாக நிறைய தலைவர்களை சொல்லலாம் .ஒவ்வொரு தலைவருக்கும் தனக்கென தனி தலைமைப் பண்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்களில் நாம் பார்க்க இருப்பது தந்தை பெரியார் அவர்கள் ."தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார்'' என்று புரட்சிக்கவிஞன் பாவேந்தர்  பாரதிதாசன் தந்தைப் பெரியார் இவர்தாம் என அடையாளம் காட்டுகிறார்.தந்தைப் பெரியாரிடம் காணப்பட்ட நேர்மை உணர்ச்சி, சிக்கனம், அஞ்சா நெஞ்சம் , சுயமரியாதை உணர்ச்சி, கொள்கைப் பிடிப்பு, புதிய சிந்தனை, சமத்துவ எண்ணம், இடையறாத உழைப்பு, தன்னல மறுப்பு, சொல் ஒன்று செயல் ஒன்று என்ற மாறுபட்ட தன்மை இல்லாமை, சொல்லிலும் எழுத்திலும் செயலிலும் தெளிந்த நிலை, மனந்திறந்த மனப்பான்மை, எதிரியும் நேசிக்கும் இனிய குணம், சுயமான படிப்பறிவு, தள்ளாத வயதிலும்  ஓயாத படிப்பு முன்னர் சொல்லிய ஒரு கருத்தை மறுத்து, பின்னர் பேச வேண்டிய சூழ்நிலை வந்தபோது, இப்போது எந்தக் கருத்து சரியெனப் படுகிறதோ அதனை அஞ்சாமல் சொன்னவர்... இப்படியாக இன்னும் பல சிறப்புகளை எடுத்துக் கூறலாம். ஒவ்வொரு தலைவரிடமும் ஏதேனும் தனிச் சிறப்புகள் இருக்கும். பொதுவான பண்புகளை அறிவதோடு தனிச் சிறப்புகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு கடைபிடிக்க முயலுவது தலைமைப் பண்புகளை கற்போருக்கு மேலும் பலனளிக்கும்.
 

periyar image


முடிவாக -தலைமைப் பண்புகள் நம் எல்லாருக்கும் தேவை. அவற்றைக் கற்றுக் கொள்ள முடியும். ஓர் அரசியல் அமைப்புக்குத்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு தொழிற் சங்கத்துக்குத் தலைவராய் இருக்கலாம். இளைஞர் மன்றத்துக்குத் தலைவராய் இருக்கலாம். விவசாயிகள் சங்கத்திற்குத் தலைவராக இருக்கலாம். விவசாயத் தொழிலாளர் அமைப்புக்குத் தலைவராகலாம். பெண்கள் சங்கத்திற்குத் தலைமை வகிக்கலாம். மாணவர் பிரிவுக்குப் பொறுப்பேற்கலாம். சுயஉதவிக் குழுக்களை வழிநடத்தலாம்.உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சேவை புரியலாம்.

எந்த ஓர் அமைப்புக்கும் ஒருவரே வாழ்நாள் எல்லாம் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஜனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தலைவராக இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரலாம். வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் தகுதியும் நமக்கு வேண்டும்.
பஞ்சாயத்து சட்டப்படி இந்தியா முழுவதும் ஏராளமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாகவும் தலைவர்களாகவும் பொறுப்பேற்றனர். எனினும் பல இடங்களில் அந்தப் பெண்களின் பெயரால் அவர்களது கணவர்களே "ஆட்சி' செலுத்திவந்தனர். இதெல்லாம் பல இடங்களில் சிறிது காலமே. பெண்களுக்கு ஓரளவு அனுபவம் கிட்டியபின் நேரடியாக தாங்களே எல்லா முடிவுகளையும் எடுப்பதற்குத் தயாராயினர். நடைமுறையில் அவர்கள் தலைமைப் பண்புகளை கற்றுக் கொண்டார்கள். பொறுப்புகளுக்கு வந்த பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டது. இன்றும் தொடர்கிறது. ஒரு சிறு குழுவானாலும் பெரும் திரளானாலும் வழிநடத்த, தலைமை தாங்க, ஒரு குறிக்கோளை முன்வைக்க, அதனை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தலைமைப் பண்புகள் தேவைப்படுகின்றன. எனவே இவற்றை நம் எல்லாரும் கற்க முடியும் கற்று முன்னேற முடியும்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதிலும் தொழிலாளர்களை, ஊழியர்களை வழி நடத்த, உற்பத்தியை உயர்த்த, நிறுவனத்தின் உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளுடன் விளங்க வேண்டியது அவசியம். அவர்களும் தலைவர்கள்தான். ஒவ்வொரு பதவிக்குக் கீழேயும் பலரை வழிநடத்த வேண்டிவரும். தொழில் திறமை அற்றவர்கள், தொழில் திறமை மிக்கவர்கள், சோம்பேறிகள், சுறுசுறுப்பானவர்கள், லட்சியப் பிடிப்பு மிக்கவர்கள், அவநம்பிக்கையாளர்கள் என பலரும் இருப்பார்கள். 
 

periyar anna image



எல்லோரைப்பற்றியும் தெரிந்துவைத்துக் கொண்டு, ஒவ்வொருவருடனும் நல்லுறவுகளைப் பேணி, அவர்களை உற்சாகப்படுத்தி, உற்பத்தி இலக்கை அடைய, அவர்களை இட்டு செல்பவர் சிறந்த நிர்வாகிகளாக, சிறந்த தலைவர்களாக விளங்குவர்.தலைமைப் பண்புகளைக் கற்ற ஒருவர் சமுதாய நிறுவனங்களிலும் தலைவராகலலாம்; தொழில் நிறுவனங்களிலும் தலைவராகலாம்.சாதாரண ஊழியர்கூட , தலைமைப் பண்புகள் கொண்டிருந்தால் அவர்கள் ஒருநாள் தலைமைப் பொறுப்புக்கு வர முடியும். எனவே, நான் ஏதோசாதாரண கடைநிலை ஊழியன், எனக்கெதற்கு "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்' என்று நினைக்க வேண்டியதில்லை. ஊக்கம் இருந்தால் முன்னேறும் லட்சியம் மூளையில் வளர்ந்தால் போதும், கடைநிலை ஊழியரும் தலைவராகலாம்.எனவே ஆண், பெண், மூன்றாவது பாலின வேறுபாடுகளை யெல்லாம் மீறி எவர் வேண்டுமானாலும், தலைவராக உயர முடியும்!

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.