Skip to main content

கோவக்சினுக்கு அனுமதி குறித்து வெகு விரைவில் உலக சுகாதார நிறுவனம் முடிவு - வெளியான புதிய தகவல்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

COVAXIN

 

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரக்கால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதன்பிறகு, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் வழங்குவது குறித்து நான்கு முதல் ஆறு வாரங்களில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நிபுணர் சௌமியா ஸ்வாமிநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் எப்போது அவசரக்கால அனுமதி அளிக்கும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு, மற்ற கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் பார்த்தால், அவசரக்கால அனுமதிக்கான நடைமுறை முடிவடைய, தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது எனக் கூறியது.

 

இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் எனத் தெரியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கான உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியங்கேலா சிமாவோ, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி அளிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்தச்சூழலில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்குவது குறித்து உலக சுகாதார நிறுவனம், இந்த வாரத்தில் முடிவெடுக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்