Skip to main content

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல்; 9 பாலஸ்தீனியர்கள் பலி!

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
9 Palestinians were lost in an Israeli conflict on the West Bank

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை  40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குண்டு சத்தங்களுடன் காசா நகர் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அதே சமயம், மேற்கு கரை பகுதியில் ஹமாஸின் ஊடுருவல் இருப்பதால் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், அங்கு திடீர் திடீரென தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி திடீரென நடத்தப்படும் தாக்குதலில், பாலஸ்தினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று மேற்கு கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 போர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாஸ் பகுதியில் 7 பேரும், ஜெனின் பகுதியில் 2 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஆட்சி நடத்தி வந்தாலும், அங்கு 30 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்