![Youth insulted a woman in a government bus in free ticket](http://image.nakkheeran.in/cdn/farfuture/MsczWq8DC_YLipSzqyMy9_rBAIfsHmLJh6h50mVFUZQ/1739259779/sites/default/files/inline-images/58_59.jpg)
‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில் பெண்கள் இலவசமாக பயணிக்கு வகையில் குறிப்பிட்ட பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இந்த பேருந்தில் பணிக்கும் பெண்களை சில நடத்துனர்கள், ‘ஓசியில் தானே பயணம் செய்கிறீர்கள்.. என்று கேட்ட சம்பவங்களும் பல அரங்கேறி இருக்கின்றனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதே சமயம் பேருந்துகளில் ஏறும் ஆண்கள் சிலரும் பெண்களை பார்த்து ஓசி டிக்கெட் என்று கூறுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று சென்னை சென்னை ஐய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லக்கூடிய பேருந்து(மகளிர் விடியல் பயணம்) ஒன்றில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறியுள்ளனர். பின்னர் பெண்கள் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞர்கள் பேருந்தில் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த மூதாட்டியும் நின்றுள்ளனர். அப்போது பேருந்தில் இருந்த பெண் ஒருவர், நீங்கள் எல்லாம் பெண்கள் இருக்கையில் அமர்ந்துள்ளீர்கள் எழுந்து அவர்களுக்கு இடம் கொடுங்கள். வயதானவர்கள் நிற்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், “ஓசி டிக்கெட்ல தானே... ஓசியில டிக்கெட் எடுத்துட்டு நீங்க உக்காந்து வருவீங்க, காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு நாங்க நிக்கனுமா? என்று கிண்டல் செய்துள்ளனர். அப்போது இதனை வீடியோவ எடுத்த அந்த பெண் அவர்களிடம், 'யாரை ஓசி டிக்கெட் என்று கேட்கிறாய்' என்று கேட்க, அந்த இளைஞர்கள் பேருந்து என்று கூட பார்க்காமல் ஆபாசமாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.