Skip to main content

திருமணமானதை மறைத்த இளம்பெண்; படுகொலை செய்த கணவன்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

A young woman who concealed her marriage

 

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆமோஸ் (32). இவருக்குத் திருமணமாகி சரஸ்வதி (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு  கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆமோஸ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தன் மனைவியைப் பிரிந்து ஆந்திராவிற்குச் சென்றுவிட்டார். சரஸ்வதி தனது குழந்தைகளுடன் அம்பத்தூரில் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

அப்போது, ஆவடி நந்தவன மேட்டூரைச் சேர்ந்த, அம்பத்தூர் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர் ஜான்சன் (29) என்பவருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரஸ்வதி தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய ஜான்சன், கடந்த மே மாதம் 7 ஆம் தேதி சரஸ்வதியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனையடுத்து, அவர்கள் ஆவடி ஜீவா நகர் சின்னம்மன் கோவில் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். 

 

இந்த நிலையில், சில நாள்கள் கழித்து சரஸ்வதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்றும் ஜான்சனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி வழக்கம் போல், கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜான்சன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சரஸ்வதியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிய ஜான்சன், அந்த உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு வீட்டைப் பூட்டி வேலைக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்ற ஜான்சன் அங்கேயே இரண்டு நாள்கள் தங்கியுள்ளார்.

 

இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அங்கு இருந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்வதை அறிந்துகொண்ட ஜான்சன் காவல் நிலையத்திற்குச் சென்று இந்த சம்பவம் குறித்து தெரிவித்து சரண் அடைந்தார். 

 

ஜான்சன் அளித்த தகவலின் அடிப்படையில், உயிரிழந்த சரஸ்வதியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஜான்சன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்சனை கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்