Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு!

Published on 18/02/2025 | Edited on 18/02/2025

 

CBI files case against ADMK  former minister KT Rajenthra Bhalaji

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, “ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை” எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், “இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்க என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது.

தமிழக காவல் துறைக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை” எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது  3 பிரிவுகளின் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணி வாங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிஷ்லே குமார் சிங் விசாரிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பண மோசடி வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்