![young man in Chennai stopped a woman wedding to take revenge on her](http://image.nakkheeran.in/cdn/farfuture/xZp1AT0ZS-dtLQVHMoMwTI5PSdO6W9U06cvG3t39_cU/1738995826/sites/default/files/inline-images/7_136.jpg)
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் த்ரிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(21) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் த்ரிஷா வசிக்கும் பகுதி அருகே வசிக்கும் கருணாகரன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அதன் காரணமாக த்ரிஷா கருணாகரன் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு கருணாகரன் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் பெற்றோர் த்ரிஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட கருணாகரன் மாப்பிள்ளையின் செல்போனை எண்ணிற்குத் தொடர்பு கொண்டு த்ரிஷாவின் நடத்தை குறித்து தவறாகவும், அவதூறாகவும் கூறியிருக்கிறார். இதனை அப்படியே நம்பிய மாப்பிள்ளை வீட்டார், த்ரிஷாவின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு, “எங்களுக்கு பெண்ணை பிடிக்கவில்லை; இந்த திருமணம் நடக்காது..” என்று கூறியுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான த்ரிஷா, நடந்தவை குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கருணாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண்ணை பழி வாங்குவதற்காக திருமண வீட்டாரிடம் மணப்பெண் நடத்தை குறித்து தவறாக இளைஞர் கூறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.