Skip to main content

டி.எஸ்.பி. முதல் பைனான்சியர் வரை... காதலில் வீழ்த்திய கல்யாண ராணி!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
woman who has cheated many people in love, from dsp to financiers

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இதில் அந்த இளைஞரின் வாழ்க்கை நலன் கருதி அவரது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. 35 வயதான இவர்.. தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராம்குமாருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும்.. திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரண் தேடி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அம்பி டேட் தி தமிழ் வே என்ற செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா என்பவருடன் ராம்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செயலியைத் தொடர்ந்து. இவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர்.  அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் ராம்குமாருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு ராம்குமாருக்கும் திருமண வரன் அமையாமல் இருந்ததால் சந்தியாவை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதனிடையே, இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராம்குமாரிடம் சந்தியா வற்புறுத்தி உள்ளார்.

இந்த நிர்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் ராம்குமாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை ராம்குமாரின் பெற்றோரும் ஏற்றுக்கொண்ட நிலையில் சந்தியாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சந்தியா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார், சந்தியாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, ராம்குமார் தரப்பிற்கும் சந்தியாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சந்தியா, ராம்குமாரையும் அவரது குடும்பத்தையும் மிரட்டி உள்ளார்.

இதனால் உஷாரான ராம்குமார், தனது மனைவி சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சந்தியா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார். திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தியாவின் திருமண பட்டியலில் டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் எனச் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் எனச் சந்தியாவின் பட்டியல் நீண்டு கொண்டே போனது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த சந்தியாவை கைது செய்த போலீசார் அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏராளமான தொழிலதிபர்கள் சந்தியாவை திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணைக்குப் பிறகு சந்தியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

ஆன்லைன் செயலி மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்