![wife missed with money, jewelry and luxury car - stunned husband](http://image.nakkheeran.in/cdn/farfuture/clQgI-NOCvg6ijAEE6A7BjwqlV0r2SG_II0HjoSDyG8/1629462756/sites/default/files/inline-images/gold-and-money.jpg)
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தை அடுத்த கொடுங்களம் கனியன்விலை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(41). இவர் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி(35). இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறது. மோகன் ராஜ் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வார்கள். அதன்படி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் வீட்டுல் தூங்க சென்றனர்.
தொடர்ந்து நேற்று அதிகாலை மோகன்ராஜ் எழுந்தார். அப்போது மனைவி, மகளை காணவில்லை. அதன்பின் வீட்டில் தேடி பார்த்த போதும் எங்கும் இல்லை. இதனால் வெளியே வந்து பார்த்தார். வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சொகுசு காரையும் காணவில்லை. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகள், 13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் காணவில்லை. இதனால் மோகன்ராஜ் திகைத்துப் போனார். அதனைத் தொடர்ந்து உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். இருப்பினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பல இடங்களில் தேடியும் எந்த பலனும் இல்லாததால் மோகன்ராஜ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சோனியா காந்தியை தேடி வருகின்றனர். மோகன் ராஜின் மனைவி எங்கு சென்றார்? என்ன நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. பணம் நகைக்காக யாராவது தாய் மகளை கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது குடும்ப பிரச்சனை காரணமா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.