தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் 7 மாதங்களாகியும் வெளியிடப்படவில்லை. மிகமுக்கியமான இப்போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலதாமதம் செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 4602 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது ஆனால், தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இன்று வரை முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் நடப்பாண்டுக்கான அறிவிக்கை வருவதற்கு முன்பு வெளியிடப் பட்டால் தான், கடந்த ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்கள் நடப்பாண்டுக்கான தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமா.... வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்பதால் தான் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தொகுதி தேர்வு முடிவுகள் ஒருபோதும் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டதில்லை.
முதல் தொகுதித் தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வெளியிடப்படுவதால் அதை எழுதிய மாணவர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். இத்தேர்வுக்குதயாராகும் வாய்ப்புகளும், வசதிகளும் கிராமப்புறங்களில் இல்லை என்பதால் ஊரக மாணவர்கள் சென்னை, மதுரை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் தங்கி தேர்வுக்கு தயாராகின்றனர். தேர்வில் வெற்றி பெரும் வரை அவர்கள் நகர்ப்புறங்களில் தங்கி பயிற்சி பெற வேண்டும் என்பதால், அதற்கான செலவுகளை அவர்களால் சமாளிக்க முடியாது. இதையெல்லாம் உணராத தமிழக ஆட்சியாளர்கள் முதல் தொகுதி தேர்வு முடிவுகளை வெளியிட காலதாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
அதுமட்டுமின்றி தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அரசு நிர்வாகம் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கெல்லாம் மேலாக மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள ஐயம் என்னவென்றால் முதல்தொகுதி தேர்வு முடிவுகளில் ஏதேனும் முறைகேடு செய்வதற்காகத்தான் காலதாமதம் செய்யப்படுகிறதோ? என்பது தான். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருவதால் இந்த ஆண்டும் முறைகேடுகள் நடக்குமோ? என்ற ஐயம் நியாயமானதுதான். இந்த ஐயத்தை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்தொகுதி பணிகளுக்கான போட்டித்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்வு முடிவுகளில் எந்த முறைகேடும் நடைபெறாத வகையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு முடிவுகள் தயாரித்து வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முதல் தொகுதி தேர்வு முடிவு தாமதம் ஏன்.. முறைகேடு செய்ய சதியா? ராமதாஸ் கேள்வி
சார்ந்த செய்திகள்
Next Story
‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
‘நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியல் ரத்து’ - உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 12 ஆயிரம் பேருக்கு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நிலை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி இருந்தது. இதனையடுத்து 2 ஆயிரத்து 544 பேர் முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிவில் நீதிபதி 245 பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. மேலும் இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், “சிவில் நீதிபதி பணியிடங்களுக்குத் தேர்வானவர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு முறையில் குளறுபடி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைப் பொதுப் பிரிவில் சேர்க்கவில்லை. இதனால் மற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.