![Udayanidhi Stalin who told the story of the lock](http://image.nakkheeran.in/cdn/farfuture/T0B6zYml3f2yytrG1utBOQgvNRdIm3SziS_RR-IOSG0/1700692535/sites/default/files/inline-images/a3124.jpg)
'தமிழ்நாட்டு மக்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று தமிழக முதல்வருக்குத்தான் தெரியும்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,''பூட்டப்பட்ட ஒரு பூட்டின் பக்கத்தில் ஒரு சாவி, ஒரு சுத்தியல் இருந்தது. இந்த பூட்டை திறப்பதற்கு சுத்தியல் எவ்வளவோ முயற்சி செய்தது. பூட்டினுடைய தலையில் ஓங்கி ஓங்கி அடித்தது சுத்தியல். அடித்தால் பூட்டு திறந்திடும் என நினைத்தது. ஆனால் பூட்டு திறக்கவே இல்லை. ஆனால் அந்த சாவி ரொம்ப சுலபமா பூட்டை திறந்திடுச்சு. இதனால் அந்த சுத்தியல் சாவியை பார்த்து கேட்டதாம் 'நான் உன்னை விட எவ்வளவு பெருசா இருக்கிறேன். எவ்வளவு வலிமையா இருக்கேன். நான் எவ்வளவோ முயற்சித்தேன் ஆனால் என்னால் பூட்டை திறக்க முடியல. நீ மட்டும் எப்படி இவ்வளவு சுலபமா பூட்டை திறந்த' எனக் கேட்டதாம். அதற்கு சாவி, 'ஆமாம் நான் உன்னை விட பலசாலி கிடையாது, உருவத்திலும் சரி, அளவிலும் சரி நான் உன்னை விட சின்னவன் தான். ஆனால் நான் பூட்டினுடைய இதயத்தை போய் தொடுகிறேன். அதனால்தான் பூட்டு திறக்கிறது. நீ பூட்டைத் திறப்பதற்கு பூட்டின் தலையிலேயே அடிக்கிறாய். தலையில் அடித்தால் பூட்டு திறக்காது' என்று அந்த சாவி சொல்லியதாம்.
இந்த இடத்தில் நான் பூட்டு என சொல்வது நம்முடைய தமிழ்நாட்டை. சுத்தியல் என்று சொன்னது ஒன்றிய பாஜக அரசு. சாவி என்று சொல்வது நம்முடைய முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகமும். ஒன்றிய பாஜக எவ்வளவு தான் தலையில அடிச்சு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்றாலும் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள் அந்த சாவியை நம்ம முதல்வர் கையில் தான் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நமது முதல்வருக்கு தான் தெரியும் தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருக்கும் முடியும் என்று'' என்றார்.