Skip to main content

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி... இருவர் கைது..!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Two arrested for fraudulently Rs 9.17 lakh to work abroad

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (58). இவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "2015ஆம் ஆண்டு பண்ருட்டியில் ஸ்வீட் கடை நடத்தி வந்தபோது, கடலூரைச் சேர்ந்த அன்வர் பாட்ஷா என்பவருடன் அறிமுகம் கிடைத்தது. அப்போது, அன்வர் பாட்ஷா, கோண்டூரைச் சேர்ந்த முனிராபேகம் மற்றும் அவரது கணவர் முகம்மது அஜ்மல்கான் உள்ளிட்டோர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறினர். 


அதன்பேரில் நானும், எனது நண்பர்களான பண்ருட்டி அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்(50), மாளிகைமேடு குமார்(40) ஆகியோர் முனிராபேகத்தைச் சந்தித்தோம். அவர், லண்டனில் உள்ள தனது கணவர் முகமது அஜ்மல்கான் மூலமாக அந்நாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறினார்.


அதனை நம்பி முனிராபேகம், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முகமது அஜ்மல் கான், அன்வர்பாட்ஷா ஆகியோரிடம் பல தவணைகளாக ரூ.9 லட்சத்து 17 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தினர். பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முனிராபேகம், முகம்மது அஜ்மல்கான், அன்வர் பாஷா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 

இந்நிலையில், மற்றொரு பணமோசடி வழக்கில் கைதாகி கடலூர் பெண்கள் சிறையில் இருந்த முனிராபேகத்தை கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் துர்கா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கோண்டூர் வீட்டில் பதுங்கியிருந்த அன்வர் பாட்ஷாவையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முகம்மது அஜ்மல் கானை தேடி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்