Skip to main content

த.வெ.க. மாநாடு; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு!

Published on 28/10/2024 | Edited on 28/10/2024
tvk party members releated incident

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்தார். இதற்கிடையே இந்த மாநாட்டிற்காகப் பயணம் மேற்கொண்ட போது வெவ்வேறு விபத்துகளில் சிக்கி த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் த.வெ.க. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் அக்கட்சியின் தலைமை கழகம் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு எவ்வித இரங்கலும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.

இதனையடுத்து த.வெ.க. மாநாட்டிற்கு வரும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (28.10.2024) இரங்கல் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கட்சித் தொண்டர்களான திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் கில்லி வி.எல். சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெ.கே. விஜய்கலை, சென்னை பாரிமுனையை சேர்ந்தவர்களான வசந்தகுமார், ரியாஸ், செஞ்சியைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. த.வெ.க.விற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கட்சியின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கட்சித் தொண்டர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்சித் தொண்டர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

tvk party members releated incident

இதற்கிடையே தவெக மாநாட்டிற்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் லட்சுமி (65) என்பவர் சிக்கினார். இதனையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் த.வெ.க. மாநாட்டிற்குச் செல்ல முயன்றவர்கள், மாநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிச் செல்லும்போது என வெவ்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்