
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரவு ரோந்து பணிக்காக சென்ற காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள மாளிகை மேடு அடுத்துள்ளது எஸ்.கே.பாளையம். மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்புக்கும் எஸ்.கே.பாளையத்தை சேர்ந்த மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக எந்தவித அசம்பாவிதமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் அதிகப்படியான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக அந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணிக்காகச் சென்றிருந்த பொழுது காவலர்கள் சென்ற வாகனம் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காவலர் சதீஷ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. செய்தி அறிந்து வந்த காவலர் சதீஷின் உறவினர்கள் கதறி அழுதனர். அதோடு அவருடன் பணியாற்றிய காவல் துறையினரும் கதறி அழுத காட்சிகள் சோகத்தை வரவழைத்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.