!['' Whoever wants to tell ... '' Controversial VAO video!](http://image.nakkheeran.in/cdn/farfuture/amFDT0BE0srqWf1_LYjSERWBmMzLJeltCTpKL2EwHkg/1637029760/sites/default/files/inline-images/Z844.jpg)
தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து பல இடங்களில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பயிர்க் காப்பீடு அடங்கல் சான்று வாங்கக் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர், தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு விவசாயிகளை நேரடியாக வரவழைத்துப் பயிர்க் காப்பீடு அடங்கல் சான்று வழங்குவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மார்த்தாண்டபட்டி ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் வினோத் என்பவர் பயிர்க் காப்பீடு அடங்கல் சான்றிதழ் வழங்க விவசாயிகளை மணிக்கணக்கில் காக்க வைத்ததோடு, அடங்கல் சான்றிதழுக்கு தலா 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேள்வி எழுப்பினால், விவசாயிகள் தாமாக விருப்பப்பட்டுக் கொடுப்பதால் வாங்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,
!['' Whoever wants to tell ... '' Controversial VAO video!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wjo4A52Hz-j5Xq0BOsw47VsdPU6_YCohZr_ufwQoCno/1637029776/sites/default/files/inline-images/Z854.jpg)
பயனாளி: இதையெல்லாம் மேலதிகாரிகளிடம் சொல்லவா?
கிராம நிர்வாக அலுவலர்: நீங்கள் மேலதிகாரியிடம் கூட சொல்லுங்க. எனக்குப் பிரச்சனை இல்லை. யார் கிட்ட வேணாலும் சொல்லுங்க.
பயனாளி: நீங்கள் வாங்குகிறீர்கள் கட்டாயப்படுத்தி...
கிராம நிர்வாக அலுவலர்: நான் யாரிடமும் கட்டாயப்படுத்தி வாங்கவில்லை. யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்க, நான் கட்டாயப்படுத்தி வாங்குகிறேனா என்று.
பயனாளி: அவர்களே விருப்பப்பட்டுக் கொடுக்கிறார்களா?
கிராம நிர்வாக அலுவலர்: ஆமாம் அவர்களே கொடுக்கிறார்கள்.
என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.