![a sudden turn in the incident In kovai](http://image.nakkheeran.in/cdn/farfuture/4Fxxy3WNvCV7iXHoia-ymtAauwWR4Sy9RL0Ggv4CNE0/1637033513/sites/default/files/inline-images/z303%20%281%29.jpg)
நவ. 4ஆம் தேதி தீபாவளியன்று கோவையில் விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நவ. 4ஆம் தேதி தீபாவளியன்று கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பேர் தீபாவளியைக் கொண்டாட விடிய விடிய மது அருந்தியதாகவும், அதில் மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இரவு முழுவதும் மது அருந்திய மூன்று பேரும் காலையில் டாஸ்மாக் கடையில் பிளாக்கில் மீண்டும் மது வாங்கி அருந்தியதாகக் கூறப்பட்டது. அதை தொடர்ந்து, அவர்கள் மூவரும் அடுத்தடுத்து சாலையில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
![a sudden turn in the incident In kovai](http://image.nakkheeran.in/cdn/farfuture/9acWF-msLprF4XBb4eIbexrPxShTSqz4oI4br8ChzBg/1637033779/sites/default/files/inline-images/z867.jpg)
இந்த தொடர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரித்துவந்தனர். தொடர்ச்சியாக மது அருந்தியதால் அவர்கள் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களது உடற்கூறாய்வு அறிக்கையில் மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ராஜசேகர் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். முன்பகை காரணமாக இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.