![Strengthening condemnation for Seaman! Congressman Demonstration!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AiYP0nTkC1qvZo3mwHCwCFpFjZ5kPZMf8cEHCbvRmsc/1653385709/sites/default/files/inline-images/th_2391.jpg)
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என கங்கிரசார் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த ராஜீவ் காந்தியை அவர் என்ன தியாகியா என விமர்சித்துள்ளார்.
இதனை கண்டித்து இன்று திருச்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சீமானின் உருவப் படத்தை அடித்தும், எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டு தமிழக அரசு சீமான் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், “தலைவனாய் இருப்பதற்கு சுய ஒழுக்கம் வேண்டும் அது சீமானிடம் கொஞ்சமும் இல்லை. நடிகை விஜயலட்சுமி என்னுடன் சீமான் தனிமையில் இருந்தார், என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்து உள்ளார்.
அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி சீமானை கைது செய்ய வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இனி இதுபோன்று மறைந்த பாரத பிரதமரை தவறாக பேசினால் சீமான் செல்லும் இடமெல்லாம் தமிழக இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.