![Slightly increased impact in Coimbatore - Corona situation in Tamil Nadu today!](http://image.nakkheeran.in/cdn/farfuture/hl5pc-jHH6IOqEOtgEOKkkgDPlAeiVksf8vjUufzyBU/1629985687/sites/default/files/inline-images/20_19.jpg)
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,573 லிருந்து குறைந்து 1,559 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 170 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,814 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,060 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,816 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,54,323 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவையில்-216, ஈரோடு-115, திருவள்ளூர்-77, தஞ்சை-59 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவையில் 181 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து அங்கு 216 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று 31,445 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், இன்றும் கடந்த 24 மணிநேரத்தில் 30,007 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 162 பேர் உயிரிழந்துள்ளனர். ஓணம் பண்டிகைக்கு அளிக்கப்பட்ட தளர்வுகளால், கரோனா பரவல் அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்.1 ஆம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தகுந்தது.