Skip to main content

மாநகராட்சில 3 மாசமா சம்பளம் போடல... பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

salem corporation salary issues Cleaning staffs


சேலம் மாநகராட்சியில் கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் நொந்து போன தூய்மைப் பணியாளர்கள், திங்களன்று ஒருநாள் பணிகளைப் புறக்கணித்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு மண் கலயம் ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாநகராட்சியில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 500 டன் குப்பைகள் சேகரமாகின்றன. குப்பைத் தொட்டிகளில் சேகரமாகும் குப்பைகளை லாரிகளில் ஏற்றவும், தெருக்களைச் சுத்தப்படுத்தவும், சாக்கடைக் கால்வாய்களில் அடைப்புகளை சரிப்படுத்தவும் 1,050 தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தவிர, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தினக்கூலி அடிப்படையில் 1,500 தூய்மைப் பணியாளர்களும் உள்ளனர். 

 

இந்நிலையில், கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒரு மாத சம்பளம் தாமதம் ஆனபோதே, தங்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், ஒரு மாத தாமதம் என்பது மூன்று மாத தாமதமாக அதிகரித்ததே தவிர, அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

 

இதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் திங்களன்று (பிப். 8) ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்ததுடன், சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள், கையில் மண் கலயம் ஏந்தியபடி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முனபு திரண்டு முழக்கமிட்டனர். பின்னர் அங்கிருந்து மாநகராட்சி மைய அலுவலகம் நோக்கி  ஊர்வலமாக வந்தனர். 

 

இதுகுறித்து சேலம் மாவட்ட நகராட்சி, மாநகராட்சிப் பணியாளர் சங்கப் பொதுச்செயலாளர் ஜீவானந்தம் நம்மிடம் பேசினார், ''சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. கடைசியாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன்பின் டிசம்பர், ஜனவரி முடிந்து பிப். 8- ஆம் தேதி ஆகியும், முந்தைய மாதங்களுக்கான ஊதியம் வழங்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர். இதனால் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களும் குடும்பம் நடத்த போதிய வருவாயின்றி தடுமாறுகின்றனர்.

 

கடந்த 5 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகையை அவர்களின் பி.எஃப். கணக்கில் இதுவரை செலுத்தவில்லை. மேலும், 22 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலருக்கு இன்னும் பி.எஃப். கணக்கு கூட தொடங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் தூய்மைப் பணியாளர்கள் பெற்ற கடனுக்கான தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும், அத்தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு செலுத்தப்படவில்லை. இதனால் நிலுவை தவணைக்கும் சேர்த்து வட்டி, அபராத வட்டி செலுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. 

 

பெண் பணியாளர்களை குப்பை லாரிகளில் ஏற்றக்கூடாது என்று நிபந்தனை உள்ளது. அதையும் மீறி அவர்களை லாரிகளில் ஏற்றி வருகின்றனர். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியைப் புறக்கணித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார் ஜீவானந்தம்.

 

தூய்மைப் பணியாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குப்பைத் தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் நிரம்பி வழிந்தன. போராட்டம் வலுக்கும் பட்சத்தில் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்