![Risk travel due to rain; Class 11 student lose their live](http://image.nakkheeran.in/cdn/farfuture/n-Oh7a8r5Fsga2VxygOVCIgzW2maaPSvED5raXjCZtE/1732624694/sites/default/files/inline-images/a1608.jpg)
கடலூரில் பேருந்தில் பயணித்த பதினோராம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தற்பொழுது தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் கடலூரிலும் பல இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கடலூரில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மாலை துரிதமாக வீட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மழை காரணமாக பல மாணவர்கள் அவசரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றுள்ளனர்.
இந்நிலையில் தனியார் பேருந்தில் ஏறிய மாணவன் பேருந்தில் இருந்து கை தவறி கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கைலாஷ் தேவனாம்பட்டினம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது தவறி கீழே விழுந்த மாணவர் மீது பேருந்தின் பின் சக்கரம் தலை மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக உடல் மீட்கப்பட்டு கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. சிறுவனின் மரணச் செய்தியை கேட்டு அவருடைய பெற்றோர்களும் உறவினர்களும் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கதறி அழுதபடி காத்திருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.