![Request to the Municipal Administration on behalf of the Communist Party of India to renovate the cemetery](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yk7M_fsNnAxErGkGHvgFDIvvOA8II7FgSxa2bG8Bl3w/1604745498/sites/default/files/inline-images/th_111.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட மயானத்தில், 'பிரேதம் எரியூட்டும் எரிமேடையின் மேல், கூரை மாற்றி அமைக்க வேண்டும்', 'மயானப் பாதை சீர் செய்யப்பட வேண்டும்', 'மயானத்தில் இருக்கும் கைப்பம்பை மாற்ற வேண்டும்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சியின் நகரச் செயலாளர் டி.எஸ்.முருகன், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் செயல் அலுவலருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அக்கோரிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, திருவெண்ணைய்நல்லூர் பேரூராட்சியில், சுடுகாட்டுப் பாதை சிதிலமடைந்து நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. சுடுகாட்டுக் கொட்டகையில் பிரேதம் எரியவைக்கும் பொழுது எப்பொழுது இடிந்து விழுமோ என்கிற பயத்திலேயே எரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவசரத்திற்கு அங்கு இருக்கும் கைப்பம்பில் நீர்வரத்து இல்லை. அந்தப்பகுதி சுகாதாரம் இல்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த மூன்று கோரிக்கைகளையும் பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.