
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ஆனந்த குமார் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதன்படி, வரும் ஜூன் 8- ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 09.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும். இந்த வேலை நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்.
அரசு செய்தி வெளியீட்டின் படி கரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணைத் தொகை ரூபாய் 2,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை ஜூன் 15- ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன்கள் விநியோகத்தினை ஜூன் 11- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி முடிய கடைப்பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.
ஜூன் 11- ஆம் தேதி முதல் ஜூன் 14- ஆம் தேதி முடிய முற்பகல் நேரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழக்கம் போல் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.