
தர்மபுரியில் விபரீதமாக மின் கம்பத்தில் கம்பியை கட்டி துணி உலர்த்தி வந்ததில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ளது ஓடச்சக்கரை கிராமம். இந்த கிராமத்தில் மாது என்பவர் வீட்டிற்கு அருகில் மின் கம்பம் ஒன்று இருந்தது. அந்த கம்பத்திற்கும் வீட்டுக்கும் இருந்த இடைவெளியில் இரும்பு கம்பி ஒன்றைக் கட்டி மாது அதில் துணிகளை உலர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த பகுதியில் பலத்த மழை பொழிந்தது. அதில் கம்பியானது கீழே விழுந்தது. இதைக்கண்ட மாதுவின் மனைவி மாதம்மாள் கம்பியை மீண்டும் மின் கம்பத்தில் கட்டுவதற்காக கையில் எடுத்துள்ளார். அப்பொழுது மின்சாரம் பாய்ந்து மாதம்மாள் கீழே விழுந்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு மகன் பெருமாள் மற்றும் உறவினர் சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கம்பத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்கிலிருந்து மின்சாரம் கசிந்து இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.