Skip to main content

டாஸ்மாக் கடைகளில் திடீர் ரெய்டு; குடிமகன்கள் மத்தியில் சலசலப்பு!

Published on 29/10/2021 | Edited on 30/10/2021

 

Raid on Tasmac stores

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் ஒரே இடத்தில் இயங்கிவரும் 3 டாஸ்மாக் கடைகளில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் ஒன்றிற்கு ரூ10 கூடுதலாக வசூலிப்பதாகவும் அப்படி வசூலிக்கும் பணத்தை மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிக்குமார் மாதம் ஒருமுறை நேரடியாக வந்து வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

 

இதுகுறித்து ரகசியத் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா மெல்வின் சிங், ஆய்வாளர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா ஆகியோர் அப்பகுதியில் காத்திருந்தனர். அப்போது தெற்கிருப்பு டாஸ்மாக் கடைக்கு காரில் வந்த மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிக்குமாரை மடக்கி மேற்கண்ட 3 கடைகளின் மேற்பார்வையாளர்கள் ரவிக்குமாரின் ஓட்டுநர் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி, கடைகளில் சரக்கு இருப்பு ரொக்கம் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

 

அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 300 ரூபாய் இருந்தது. அவற்றைக் கைப்பற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் தணிக்கை காரணமாக நேற்று மாலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்ற பிறகு டாஸ்மாக் கடையில் கூடுதலாக ரூ 10 வசூலிக்கப்பட்டது. இதனால் குடி பிரியர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.