![Premalatha demands that govt set up a Mani Mandapam in a public place for Vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/YG0pKiGLax0liFwmz8EPevi2fCYKWQd8OUJ5vT2DmUk/1703928757/sites/default/files/inline-images/Untitled-1_553.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம்(28.12.2023) காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், விஜயகாந்த்திற்கு பொது இடத்தில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கேப்டனுக்கு தலைமை கழகத்திலேயே மிகப் பெரிய சமாதி அமைக்கவிருக்கிறோம்; நீங்கள் எல்லாரும் கேப்டன் விஜயகாந்த்திற்கு மண் எடுத்துப் போட்டு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால் போலீஸ் தரப்பில் தலைமை அலுவலகம் சிறிய இடம், அவர்களுக்கு இடம் போதியதாக இருக்காது என்று கூறியதால் உங்களை அனுமதிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நினைவிடம் வரலாம்; வந்து உங்கள் அஞ்சலியை செலுத்தலாம்.
பொது இடத்தில் கேப்டனுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஊருக்கே சோறுபோட்ட அவர் இல்லை என்றபோது, எங்களால் சாப்பிட முடியவில்லை. எங்களுக்கு ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் கேப்டன் முகம் தான் தெரிகிறது. நிறைய கடமைகளை விட்டுவிட்டு போய் இருக்கிறார். அதை அனைத்தையும் தேமுதிகவினர் நிச்சயம் செய்துமுடிப்போம் என்று துக்கத்தில் கதறி அழுதார்.