தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் ஜெயமங்கலம் காந்தி நகர் காலனியை சேர்ந்த காளிமுத்து அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கார்த்திக்கும் அவரது நண்பர்களும் இருசக்கர வாகனத்தில் ஜெயமங்களத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அம்பலக்காரர் சாவடி அருகே இளைஞர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கார்த்திக் உள்பட 3 பேரும் பைக்கில் சென்றபோது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அது மோதலாக மாறியது. அப்போது கார்த்திக் உடன் வந்தவர்களும் அந்த வாலிபர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். எதிர்தரப்பு தாக்கியதில் கார்த்திக் நிலைகுலைந்து கீழே சாய்ந்தார். படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கூறி கார்த்திக் உறவினர்கள் தேனி பெரியகுளம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகிறார்கள். இந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.