![Practitioners in Chidambaram carry a plate of food and struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/lrEB8tGpIfp4tWlXmupsoXrrefW-fWYxvHokOW6uy7M/1642482391/sites/default/files/inline-images/th_1607.jpg)
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 25 ஆயிரத்தை இந்தக் கல்லூரியிலும் வழங்க வலியுறுத்தித் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மருத்துவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் 11 மணிக்குள் விடுதியைக் காலிசெய்ய வேண்டும் என்ற அறிவிப்பை ஒட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்களிடம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, துணைவேந்தர் கதிரேசன், பதிவாளர் சீதாராமன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாணவர்கள் விடுதிக்குச் சென்று தட்டேந்தி உணவு கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களின் ஒரே கோரிக்கை ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கோஷங்களை எழுப்பினர். கரோனா காலங்களில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்கள் 40 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், பயிற்சி மருத்துவர்களின் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுவரை போராட்டதைக் கைவிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.