Skip to main content

பாலியல் வழக்கு; தலைமறைவாக இருந்த போதகர் ஜான் ஜெபராஜ் கைது

Published on 13/04/2025 | Edited on 13/04/2025
Pastor John Jebaraj, who was absconding, arrested in case

கோவை ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்துவ மதபோதகரான இவர் பல்வேறு மத போதனை நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி வந்தவர். இவருடைய பிரம்மாண்ட மத போதனைகள் மூலம் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக இருந்தார். குறிப்பாக கிறிஸ்துவ பாடல்களை பாப் இசையில் பாடி, நடனமாடி அதன் மூலம் பிரபலமாகி இருந்தார். ஜெபராஜ், எட்வின் ரூஸோ என்பருடன் இணைந்து கோவை கிராஸ்கட் சாலையில் 'கிங் ஜெனரேஷன்' என்ற பிரார்த்தனை கூடத்தை நடத்தி வந்தார்.

இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இதனால் ஜான் ஜெபராஜ் அங்கிருந்து அடித்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜான் ஜெபராஜ் சிறுமிகளை முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து ஜான் ஜெபராஜ் மீது இரண்டு போக்ஸோ வழக்கு பாய்ந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி இல்லத்தில் நடந்த பார்ட்டி ஒன்றின் பொழுது அதில் கலந்து கொள்ள வந்த 17 வயது மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் கோவை மாநகர மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என போலீசார் சந்தேகிப்பதால் கோவை காவல்துறை சார்பில் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டிருந்தது.

பல இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், மூணாறில் வைத்து தற்போது போலீசார் ஜான் ஜெபராஜை  போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜை கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்