![Panchayat chairman post auctioned for Rs 14 lakh](http://image.nakkheeran.in/cdn/farfuture/HKiO9jtcCGOBPte8C44KrG77Dw9-qMlX7qLvXoUD7m4/1632022264/sites/default/files/inline-images/7762.jpg)
விழுப்புரத்தில் ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட நிலையில் மற்றொரு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் ஏலம் விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது.
விழுப்புரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கும், துத்திப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி 20.08 லட்சத்துக்கு ஏலம் போனது தொடர்பாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதில் பதவி ஏலம் விடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விடுவதாக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அறிவித்துள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட முடிவு செய்த நிலையில் ஏலம் ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கி 14 லட்சத்தில் முடிந்தது. வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவர் 14 லட்சத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்துள்ளார். இப்படி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தொடர்பாகக் கிராம இளைஞர்கள் வருவாய்த் துறையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கிராமத்திற்கு வந்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.