
நீட் விலக்கு சட்ட முன் வடிவைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் இனியும் தாமதம் செய்வது, அவர் வகிக்கும் பதவிக்கும், பெருமைச் சேர்க்காது என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
நீட் விலக்கு சட்டமுன்வடிவை அனுப்பி வைப்பதில் ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டவர்களை மனதில் வைத்து ஆளுநர் விரைந்து முடிவெடுத்தாக வேண்டும். நீட் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அரசியல் விருப்பு வெறுப்புகளை இதில் செலுத்தியோ(அல்லது) தவறான சில மனிதர்களின் வழிகாட்டுதல்கள் படியோ, ஆளுநர் தாமதிப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமுன்வடிவு சரியானதா, இல்லையா என அட்டர்னி ஜெனரலை வைத்து குடியரசுத்தலைவர் ஆய்வு நடத்திக் கொள்வார் என்றும், ஆனால் குடியரசுத்தலைவரின் பணியை ஆளுநர் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடந்து கொள்ளும் முறை என்பது, இன்றைய கேபினட் சிஸ்டத்துக்கே எதிரானது. 1920- ஆம் ஆண்டுகளில் அமலில் இருந்த இரட்டையாட்சி முறை அமலில் இருப்பதைப் போல ஆளுநர்கள் செயல்பட முடியாது என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.