![Natarajar Temple festival Police prevented a major accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/i05SGRNyURpZc9mLn7qwT80BTfX2wMgX8QuUo2oFA-k/1647238902/sites/default/files/inline-images/th_1902.jpg)
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலிலிருந்து பங்குனி உத்திர விழாவையொட்டி 5ஆம் நாளான ஞாயிறு இரவு, முருகன் சாமி சிலை சகடையில் 20 அடி உயரத்திற்கு மேல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கீழ வீதியில் இருந்து, தெற்கு வீதிக்கு வீதி உலா சென்றது.
கோவில் தரப்பில் காவல்துறை, மின்துறையிடம் சாமி வீதி உலா குறித்த அனுமதி பெறவில்லை. இந்நிலையில் தெற்கு வீதிக்கு வந்தபோது சாலையின் குறுக்கே மின் ஒயர் சென்றது. இதனை சாமி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் அறுக்க முயற்சித்தனர். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினர் விசாரித்தனர். இது குறித்து முன்கூட்டியே தகவல் கூறி இருந்தால் மின் ஒயரை எடுக்க ஏற்பாடு செய்து இருக்கலாம். ஏன் கூறவில்லை என்று சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடம் ஆய்வாளர் ஆறுமும் உள்ளிட்ட காவல் துறையினர் கேட்டுள்ளனர்.
அப்போது காவல் துறையினரிடம் சாமி ஊர்வலத்தில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மின் ஒயரை அறுத்துவிட்டனர். இதனால் மின் ஒயரிலிந்து தீப்பொறி ஏற்பட்டது. இதனை பார்த்தவர்கள் சத்தமிட்டனர். உடனே காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து மின் சப்ளை செல்லும் மின் கட்டையைப் புடுங்கினார்கள். ஒயரில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு உயிர் சேதம் ஏற்படாத வகையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதேபோல் மேலவீதி கஞ்சி தொட்டிமுனையில் மின் ஒயர் சென்றது. சாமி ஊர்வலத்தைச் சிறிது நேரம் நிறுத்த அறிவுறுத்தி மின்துறையில் இருந்து ஆட்களை வரவழைத்து மின் ஒயர் அகற்றப்பட்டது. பின்னர் ஊர்வலம் நடைபெற்றது. இது குறித்து அறிந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் காவல்துறையினர் இரவு நேரத்தில் குவிந்ததால் அங்கு 1 மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பாக இருந்தது. அனுமதி இல்லாமல் மின் ஒயரை அறுத்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகக் கூறினர்.