சீர்காழியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அவரது உறவினர்கள் உள்ளிட்ட சிலர் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஊரடங்கை மதிக்காமல் சட்டத்தை மீறியதாக 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
![4444](http://image.nakkheeran.in/cdn/farfuture/ut_VuUJPOwdsm13Ir1kwdajibO3xE2VsBa4l2r2usIY/1587306059/sites/default/files/inline-images/4444_1.jpg)
நாகை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் தெருவை சேர்ந்த ஒருவருக்கு 19 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த அவர், சீர்காழியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டிற்கு திரும்பிய அவரை உறவினர்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்றனர். வரவேற்பு அளித்த சம்பவத்தை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பிலும் பரவ செய்தனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பபிதா, சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் ஊரடங்கை மதிக்காமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஊர்வலமாக சென்று வரவேற்பு அளித்துள்ளதாகவும் 15 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நபர் உள்ளிட்ட 15 பேர் மீது சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.