Skip to main content

முதல்வருக்காக போடப்பட்ட சாலை, ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காத அவலம்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

kanyakumari road issue

 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை இரண்டு முறை தள்ளிப்போனதால், மூன்றாவது முறையாகக் கடந்த 14ஆம் தேதி அவர் வருவது உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் வந்து செல்லும் சாலையில் உள்ள குண்டு குழிகளை நிரப்பி, புதிய சாலையை இரவு பகலாக போட்டனர். 

இந்த நிலையில், முதல்வரின் தாயார் திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்ததால் முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டது. முதல்வர் வந்திருந்தால் நிகழ்ச்சி நடக்க இருந்த நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் தார் சாலைகளும் வேகமாகப் போடப்பட்டன. அந்தத் தார் சாலைகள் அடுத்த நாளே உடைந்து பெயா்ந்தன.

 

இதனால், ஒரு நாள்கூட தாக்குப் பிடிக்கவில்லை என அந்தச் சாலையைப் போட்ட அதிகாரிகள் மீது பொது மக்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கிடையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏக்கள் தி.மு.க சுரேஷ்ராஜன், காங்கிரஸ் ராஜேஷ்குமார் இருவரும் பெயா்ந்துகிடந்த சாலைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர்கள் அந்தச் சாலையைக் கைகளால் தோண்டி வாரி எடுத்தனர்.


இது குறித்து எம்.எல்.ஏக்கள் கூறும் போது, "முதல்வர் வருகைக்காக அமைக்கபட்ட பந்தல்கள்கூட இன்னும் அகற்றப்படவில்லை, அதற்குள் சாலைகள் பெயா்ந்துவிட்டன. அந்தளவுக்கு மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி தரமற்ற சாலைகளை அமைத்துள்ளனர். அந்தச் சாலையைப் போட்ட ஒப்பந்தக்காரா்கள் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம்" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்