
சென்னையில் இன்று காலை 8 இடங்களில் தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி உள்ளிட்ட 8 பகுதிகளில் பத்து சவரனுக்கு மேற்பட்ட நகைகள் ஒரே மணி நேரத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் எல்லைக்கு உட்பட்ட ஆறு இடங்களில் செயின் பறிப்புகள் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சைதாப்பேட்டை மீன்வளத்துறை அருகே இந்திரா என்ற பெண்ணிடம் நான்கு சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சாப்பாடு கடை வைத்திருக்கும் இந்திரா என்ற பெண் இன்று காலை ஆறு மணி அளவில் கடைக்கு சென்று கடையருகே கிடந்த குப்பைகளை கூட்டியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவருடைய கழுத்தில் இருந்த நான்கு சவரன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். இதேபோல் சென்னையில் பல இடங்களில் எட்டுக்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் இன்று ஒரே நாளில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.