Skip to main content

சேலத்தை தொடர்ந்து, மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018


சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து, மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைய உள்ளது என சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பேசினார்.

அப்போது அவர், திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே அமைய உள்ள 6 வழி சாலை திட்டத்தையும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணி முடிந்துவிட்டது. தயவுசெய்து அதுபற்றி பேசாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்” என்றார்.

 

 

அப்போது எழுந்து பேசிய தி.மு.க. கொறடா சக்கரபாணி, “இனி நில எடுப்பின்போது தமிழகம் முழுவதும் இதேபோல் இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படுமா?” என்றார்.

அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும். ரோடு போடுவதற்காக மக்களை ரோட்டில் விடாது இந்த அரசு. சிலர், மக்களை மூளை சலவை செய்ய முயற்சி செய்கிறார்கள். அது பலனளிக்காது.

அரசியல் காரணங்களுக்காக வளர்ச்சியை தடுக்க முயற்சி செய்கிறார்கள். அடுத்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைய உள்ளது. படிப்படியாக அது நிறைவேற்றப்படும்” என்றார்.

சார்ந்த செய்திகள்