Skip to main content

கரோனா தடுப்பு: வீடுகளைத் தேடி வரும் காய்கறி, பால் வண்டிகளின் சேவையைச் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் வரும் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட எல்லைகளை மூடி கரோனா பரவலைத் தடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி, மளிகை, பால், இறைச்சி உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அலை மோதியது. இதனால் சமூக தொற்று ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டது. இதனையொட்டி சிதம்பரம் பேருந்து நிலையம் மற்றும் நகரத்தினுள் பெரிய இடங்களில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டது. 

fruits and milk home delivery service chidambaram mla

இதிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் சிதம்பரம் நகராட்சி சார்பில் ஆணையர் சுரேந்தரஷா 10 வாகனங்களில் காய்கறிகள் 1 வண்டியில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீட்டுக்கே சென்று பொதுமக்களிடம் கொடுக்கும் வகையிலும் கரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு வீடுகளைத் தேடி காய்கறி,பால் வண்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் பொதுமக்கள் வீட்டிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 

fruits and milk home delivery service chidambaram mla

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், "பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வீட்டைத் தேடி வரும். இதற்கு பொதுமக்கள் சிதம்பரம் நகராட்சி தொலைபேசி எண்ணிலும், மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள 1077 என்ற அவசரகால உதவி எண்ணைத் தொடர்பு கொண்டால், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வீட்டுக்கு வரும். எக்காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். 

பொதுமக்களுக்கு வீட்டில் உணவு இல்லை என்றால்கூட உதவி மைய எண்ணில் தொடர்புகொண்டால், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படும்.எனவே கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு" கேட்டுக் கொண்டார். 
 

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன், அதிமுக நகரச் செயலாளர் செந்தில்குமார் பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்