![Fisherman's handed over after 5 days of struggle!](http://image.nakkheeran.in/cdn/farfuture/GNPkgYJZTjbeYMQXgSHpdFJBmwrCVJp9Qs8oySDdFP4/1634968610/sites/default/files/inline-images/z61_4.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 17ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், 18ஆம் தேதி அதிகாலை ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோர் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகிலிருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த கடற்படையினர், காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் இந்த சம்பவத்தில் ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போனது. அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலைத் திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (21.10.2021) ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டதாகப் படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், மீனவர் ராஜ்கிரணின் உடல் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெற கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்களும், இரண்டு அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்ற நிலையில், இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் மீனவர் ராஜ்கிரணின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.