![Fake government job ... person arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/HSvWBWAZopwYTcAPZ3Tn4-5VLf1c38aZ-S8m7zu8Ecw/1600693252/sites/default/files/inline-images/cop_0.jpg)
அரசு வேலை வேண்டுமா? பத்து லட்சம், எட்டு லட்சம், ஏழு லட்சம்... என போலிகள் நடமாட்டம் ஊருக்கு ஊர் இருக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் ஈரோட்டிலும்.
ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் சென்ற 1ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவர் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, தன்னை ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாகக் கூறி, ஒரு பணி ஆணையைக் கொடுத்துள்ளார். அந்தப் பணி ஆணையில் அச்சு அசலாக அரசு துறைகளில் வழங்குவதைப் போலவே ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மைக் கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல் போன்றவை இருந்துள்ளது.
ஆனால், முதன்மைக் கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் சிறிய மாற்றம் இருந்ததால், எச்சரிக்கையான அந்தத் தலைமையாசிரியை உடனடியாக ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இந்தப் பணி ஆணை குறித்து விவரம் கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை இந்த ஆண்டில் நாங்கள் யாருக்கும் வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள். இதனால் தலைமையாசிரியை அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அழைத்துச் சென்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார்.
இதைத் தொடா்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பணி ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பதனை உறுதி செய்தனர். தொடர்ந்து, அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த ஒருவர், ரயில்வே காலனி அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூபாய் பத்து லட்சம் பணம் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாகவும் அந்த நபர் கூறினார். பிறகு பேச்சுவார்த்தையில் ரூ.7 லட்சம் தருவதாகக் கூறினேன். அதற்கு, அவர் முன்பணமாக ரூபாய் 3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் மீதமுள்ள பணத்தை வேலை கிடைத்ததும் கொடுத்தால் போதும் எனவும் கூறினார். நானும் எனது பெற்றோர் மூலம் அந்த நபருக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுத்தேன். இதன்பேரில், அந்த நபர் எனக்குப் பணி ஆணை கொடுத்தார் எனக் கூறியிருக்கிறார்.
![Ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/24IIj_WWURXA9FUDRz1Ui6oztOGg8IfO7fdyY44u2y8/1598702903/sites/default/files/inline-images/01_19.png)
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, ஈரோடு மாவட்ட எஸ்.பி, தங்கதுரையிடம் புகார் கொடுத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலி நியமன ஆணையை அச்சிட்டு வழங்கியது அவல்பூந்துறை என்ற பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற வாலிபர் எனக் கண்டுபிடித்து போலீசார் அந்தப் போலி ஆசாமியைக் கைது செய்தனர். மேலும் இந்தப் போலி நியமன பணி ஆணை அவராகவே தயாரித்தாரா? இதற்கு அரசியல்வாதிகள் யாரேனும் உடந்தையா என அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.