Skip to main content

ராசிபுரம் நகராட்சியுடன் கிராமங்களை இணைக்கும் முடிவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
rasipuram

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியுடன் கிராமங்களை இணைக்கும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

அரசுக்கு வருவாயை பெருக்குவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரம் உள்ளிட்ட நான்கு கிராமங்களை ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க நகராட்சி ஆணையர், தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

 

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரசேகரபுரம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வேம்புசேகரன் பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது,  நகராட்சியுடன் இணைப்பதால், கிராமங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசுகள்  வழங்கும் திட்டங்கள்  கிடைக்காமல் கிராமத்தினர் பாதிக்க வாய்ப்புள்ளது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கிராமங்களை நகராட்சியுடன் இணைப்பதா, வேண்டாமா என்பது குறித்து அரசுத்தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றம் எந்த  முடிவையும் எடுக்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகள் விற்பனை வழக்கு: பெங்களூரைச் சேர்ந்த பெண் இடைத்தரகர் கைது!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் இடைத்தரகர் ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

s


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா என்கிற அமுதவல்லி (50), குழந்தைகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். 


இதுவரை அமுதவல்லி மட்டுமின்றி அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் உள்பட 8 பேர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டனர். 


பின்னர் இந்த வழக்கு ராசிபுரம் காவல்துறையினரிடம் இருந்து சேலம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அமுதவல்லி மற்றும் இடைத்தரகர்கள் முருகேசன், பர்வீன், லீலா, செல்வி உள்ளிட்டோரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. பர்வீன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் உடந்தையாக இருந்ததாக சேலம் சர்க்கார் கொல்லபட்டி கிராம செவிலியர் சாந்தி என்பவரை கடந்த வாரம் கைது செய்தனர். 


இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ரேகா (40) என்ற பெண் இடைத்தரகர் ஒருவரும் அமுதவல்லியிடம் சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி, பெங்களூருவில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 


இதையடுத்து சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவலர்கள், பெங்களூருவுக்கு விரைந்து சென்று ரேகாவை மே 17ல் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, சனிக்கிழமை (மே 18) நாமக்கல் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். ரேகாவை வரும் 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 


சட்ட விரோத குழந்தைகள் விற்பனை வழக்கில் ரேகாவுடன் சேர்த்து கைது எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Next Story

மார்ச் -5ல் மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
nithi1

 

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

 

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது போது "குற்ற வழக்குகளில் கைதான நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கவே நித்தியானந்தா முயற்சிப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

 

குறுக்கிட்ட நீதிபதி, நித்தியானந்தா தானாக வரவில்லை. அவரை நியமித்ததே தற்போதைய ஆதீனம் தான் என்றார்.   அதற்கு தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்தியானந்தா நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

 

நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், பொதுநல மனுவாகவோ, சிவில் வழக்காகவோ தான் தாக்கல் செய்திருக்க வேண்டும்.  மடத்தில் முறையாக பூஜைகள் நடக்காததால் தான், பூஜைகள் நடத்த வேண்டும். அதற்கு மடத்துக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்றார்.

 

 பூஜைகள் செய்ய ஓதுவார்களை நியமிக்கலாம் எனக் கூறிய நீதிபதி, சிவில் வழக்குகள் முடியும் வரை   மதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் என நித்தியானந்தா கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

 

கோரிக்கை மனுவை பரிசீலிக்க கோரிய வழக்குக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்ற நீதிபதி, மடத்துக்குள் நுழைய உங்களுக்கு உரிமையில்லை எனவும், ஆதீனமாக நியமிப்பதற்கான மடத்தின் நிபந்தனைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என மற்றொரு வழக்கின் தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி தெரிவித்துள்ளார் என நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார்.

 

நித்தியானந்தாவின் நடவடிக்கை, நேர்மை பற்றி  எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

 

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி மகாதேவன், 2ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.