Skip to main content

கந்து வட்டி கொடுமை! இளைஞர் தற்கொலை! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Debt issue youth passed away after recording video

கள்ளக்குறிச்சி மாவட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் என்கிற தினேஷ்(21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் பைனான்ஸ் கம்பெனியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுக்கும் பணியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று திடீரென்று தினேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தனது செல்போனில் வீடியோ மற்றும் ஆடியோவில் பேசி விட்டு விஷம் குடித்துவிட்டு தென் கீரனூர் பகுதியில் உள்ள சீனு என்பவரது பாசன கிணற்றில்குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்த பரபரப்பு தகவல், நகரம் முழுவதும் பரவியது. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றிலிருந்து தினேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

தற்கொலை செய்து கொண்ட தினேஷ், வீடியோவில் பேசியுள்ள தகவலில், ‘நான், வேலை செய்து வந்த பைனான்ஸ் கம்பெனி உரிமையாளர் என்னை மனரீதியாக துன்புறுத்தி வந்தார். நான் ஒருவரிடம் கடன் பெற்று இருந்தேன். அதற்காக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு பெற்று செல்போன் மூலம் பரிவர்த்தனை செய்து கொடுத்து விட்டேன். அந்த பணத்திற்கு அதற்கு மீட்டர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்ததோடு என்னை மனரீதியாக தொந்தரவு செய்து வந்தார். அதனால் என்னால் வாழ முடியாமல் விஷம் குடித்து ஒன்றரை மணி நேரம் ஆகிறது. அதோடு தென்கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது அம்மா, பாட்டி, சித்தி ஆகியோர் என்னை மன்னிக்க வேண்டும்’ என தினேஷ் பேசிய வீடியோ ஆடியோவில் பதிவாகியிருந்தது. 


இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து தினேஷின் தற்கொலைக்கு காரணமான கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைசேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் பொரசாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தினேஷ் அவர்களிடம் கடன் பெற்ற வகையில் வட்டியும் அசலும் சேர்த்து ஏழரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் கந்து வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் கொடுத்த இருவரும் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என தினேஷை மிரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளனர். அதோடு ஒரு கோடி பணம் தரவில்லை என்றால் பெரும் பிரச்சனை உருவாகும் என்று கடுமையாக மிரட்டியதன் காரணமாகவே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் இப்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.