Skip to main content

குற்றவாளிகளை கொண்டு சென்ற போது விபத்தில் மரணம்; உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு 93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

 

கடந்த 2013-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தை சேர்ந்த கோபி(34) என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22.12.2013 அன்று திருட்டு வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து, அவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரே வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

 

c

 

நெய்வேலி அருகே ஊ.மங்கலம் பாலம் அருகில் சென்ற போது எதிரே வந்த மீன் பாடி வண்டி காவல் வாகனம்  மீது மோதியது. இதில் காவல் வாகனத்தில் இருந்த கோபி மற்றும் கைதிகள் காயம் அடைந்தனர். கோபியை மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையிலும், சேலத்தில் உள்ள பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட காவலர்கள் சிகிச்சை செலவுக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தையும் அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 1-1-2014 அன்று உயிரிழந்தார்.

 

இதுபற்றி ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவரது தந்தை பாலு, தாயார் பாக்கியம், மனைவி உஷா, மகன்கள் அரிகரன், ஹரீஸ் ஆகியோர் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி திலகவதி கோவிந்தராஜன் கோபியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 61 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து இழப்பீடு தொகையை செலுத்தும் தேதி வரை 8 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். அதன்படி உயிரிழந்த உதவி ஆய்வாளர் கோபி குடும்பத்துக்கு இழப்பீடாக 93 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்