![coronavirus fund ration cards tn govt](http://image.nakkheeran.in/cdn/farfuture/jCAyeeNbq--Wip4OhZETW0BCYc3Qq4wJ6BVrJjjxeMg/1622911468/sites/default/files/inline-images/ration_4.jpg)
கரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணைக்கான டோக்கன் வரும் ஜூன் 11- ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ரூபாய் 2,000 மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் 11/06/2021 முதல் 14/06/2021 வரை நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், ரூபாய் 2,000 மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15/06/2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைத்தாரர்கள் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும், கரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும், ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில், மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகை ஒன்றாகவே அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
முன்னர் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் பெறும் போது எழுந்த தனிமனித இடைவெளி சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு 75 முதல் 200 வரையிலான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறைகளுக்கு இடமளிக்காமல், இவ்விரு நலத்திட்ட உதவிகளை உரிய முன்னறிவிப்புடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.