Skip to main content

இரு கண்கள் போனாலும் முடங்கிவிடாத தன்னம்பிக்கை... மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சீனிவாசன்...!!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தி.ரா.பெரியசாமி தோழர்  -  விசாலாட்சி தம்பதிகளின் மகன் சீனிவாசன். 8.8.1974 ல் பிறந்தார். விவசாய குடும்பம். பள்ளி படிப்பை முடித்தவர் பிழைப்பிற்காக அறந்தாங்கியில் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கிடம் வேலைக்கு சென்றார். தொழில் கற்றுக் கொண்ட நிலையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் தனியாக கடை திறந்தார். மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவதில் வல்லவராக இருந்தார்.

 

pudukottai

 

2003 ல் தான் பழுது நீக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கச் சென்றார். மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூக்கு, வாய், காதில் ரத்தம் கொட்டியது. பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சீனிவாசனின் நிலையை பார்த்த மருத்துவர்கள் பிழைக்க வழியில்லை. சொந்தங்களுக்கு சொல்லிவிட்டு தூக்கிச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் நண்பர்கள் கதறி அழுதனர். அதே நேரத்தில் அவரது நண்பனின் அண்ணன் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பணி செய்பவர் வந்து பார்த்துவிட்டு சிகிச்சைகள் செய்வோம் என்று நம்பிக்கை கொடுத்துவிட்டு சிகிச்சையை தொடங்கினார். 

 

 confident motorcycle mechanic Srinivasan ... !!


சக மருத்துவர்களும் துணையாக சிகிச்சை செய்த 13 நாட்களுக்கு பிறகு தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சோதனைகளுக்காக கொண்டு சென்ற போதுதான் தான் நினைவு திரும்பியது. தான் மருத்துவமனைக்கு எதற்கு வந்தோம் என்பது கூட தெரியவில்லை. அருகில் இருந்த அக்கா ஜீவரத்தினம் ஆனந்த கண்ணீர் வடித்தார். தன் தம்பிக்கு நினைவு திரும்பியது என்பதால்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு மருத்துவர்கள் சொன்னது.. தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் கண்ணுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுவிட்டது. படிப்படியாக பார்வை இழப்பு ஏற்படும் என்று சொல்லிவிட்டார்கள். அதே போல பார்வை குறையத் தொடங்கியது. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பெங்களூர் என்று 3 வருடங்கள் தொடர்ந்து சிகிச்சைக்காக சென்றும் பலனில்லை முற்றிலும் பார்வை குறைந்துவிட்டது.

இந்த நிலையில் அடுத்த இடியாக அப்பாவும் இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவுக்கும் புற்றுநோய் பாதிப்பு எற்பட அக்கா அவரை சென்னை அடையாறில் வைத்துக் கொண்டு கவனிக்க தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. ஆனாலும் துவண்டுவிடவில்லை சீனிவாசன்.

 

 confident motorcycle mechanic Srinivasan ... !!

 

பார்வை இழப்பு தானே.. தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நண்பர்களை அழைத்து மோட்டார் சைக்கிள் பாகங்களை காட்டச் சென்னார். அதற்கான டூல்ஸ்களையும் எடுத்துத் தரச் சொல்லி கழட்டி மாட்டினார். இது கொஞ்ச காலம், அடுத்து தானே எல்லாவற்றையும் செய்யத் தொடங்கிவிட்டார். அதில் கிடைத்த வருமானத்தை தன் அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக பணம் அனுப்பி வைத்தார். 5 வருடங்கள் போராட்டம்.. புற்றுநோயின் வீரியம் அதிகமாகி அம்மாவும் இறந்துவிட்டார்.
 

அதன் பிறகு தாயும், தந்தையுமாக இருந்து சகோதரி ஜீவரத்தினமே தன்னை கவணித்துக் கொள்கிறார். இந்த நிலையில் அவருக்கும் ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சொல்ல.. தனக்கு உள்ள குறைபாடுகளை சொல்ல பெண் கேளுங்கள். அவர்கள் சம்மதித்தால் பிறகு திருமணம் என்று சொல்லிவிட்டார். அதேபோல சொன்ன பிறகு எல்லாவற்றையும் அறிந்த கலா திருமணத்திற்கு சம்மதித்து கடந்த ஆவணியில் திருமணமும் முடிந்தது.

இது குறித்து சீனிவாசன் கூறும் போது.. விபத்தில் பார்வை இழப்பு ஏற்பட்டதும் துவண்டுதான் போனேன். வாழ்க்கையே இருண்டு போனதேனு பகல் இரவு பாராமல் கலங்கி அழுதேன். ஆனால் இயற்கை நமக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். நம்மாலும் வாழ முடியும், பழையபடி மோட்டார் சைக்கிள் பழுது நீக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நண்பர்களை துணைக்கு வைத்துக் கொண்டு கொஞ்ச நாள் பழகினேன். அதன் பிறகு எல்லாம் பழகிவிட்டது. இப்ப எந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினாக இருந்தாலும் தனி ஆளாக பிரிச்சு மாட்டுவேன். துணை தேவை இல்லை. என் வேலையை பார்த்துவிட்டு எனக்கென்று வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய வண்டி முதல் இப்ப வரும் லேட்டஸ்ட் வண்டி வரை எல்லாம் பழுது நீக்க முடியும். 

எஞ்சின் கழட்டி மாட்ட சில உபகரணங்கள் இல்லாமல் வேற மெக்கானிக்களிடம் ஓசி வாங்கி வந்து கழட்டி மாட்டுவேன். ஒரு நாள் அதைப் பார்த்த குளமங்கலம் பாரதப் பறவைகள் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் வந்து பார்த்திருக்காங்க. நான் வேலை செயவதைப் பார்த்துவிட்டு எஞ்சின் கழட்டி மாட்டும் அனைத்து உபகரணங்களையும் வாங்கி கொடுத்து உதவி உள்ளனர்.

எனக்கு அரசாங்கம் மாதாந்திர உதவித் தொகை கிடைக்கிறது. ஆனால் ஸ்பேர்ஸ் வாங்கி வைக்க வங்கி கடன் உதவிகள் கிடைத்தால் அதை வைத்து என்னால் இன்னும் வளர முடியும். அந்த உதவி கிடைத்தால் நல்லது. இப்ப வரை எனக்கு தாய் தந்தையாக என் சகோதரி ஜீவரத்தினம் தான் இருக்காங்க. மனைவி கலாவும் என்னை நல்லா கவனிச்சிகிறாங்க. நண்பர் உதவியும், துணையும் நல்லா கிடைக்கிறது. எனக்க பார்வை இல்லை என்ற நினைவுகளே இல்லை. யாராவது அதைப் பற்றி பேசினால் தான் தெரியும். நமக்குள் உள்ள எந்த குறையும் குறையில்லை. தன்னம்பிக்கை இருந்தால் குறைகளையும் நிறைகளாக மாற்ற முடியும் என்றார் நம்பிக்கையோடு..

அவரது வாழ்க்கைக்கு உதவி நினைத்தால் உதவிகள் செய்யலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.