Skip to main content

இருங்களூர் உப்பாற்றில் கார் கவிழ்ந்து விபத்து

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Car overturned accident in Irunalur river

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாற்றில் கார் கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

 

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் 78 வயதான பார்த்திபன். இவர் தனது உறவினர்களான 36 வயதான கரிகாலன், 48 வயதான பிரபாகரன், 60 வயதான ரங்கநாதன் ஆகியோருடன் விழுப்புரத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அரியமங்கலத்தில் இருந்து விழுப்புரத்திற்கு மாருதி காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சமயபுரம் அருகே இருங்களூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

 

இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் காரை பள்ளத்தில் இருந்து மீட்டனர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்