![An all-out struggle rally at Annamalai University](http://image.nakkheeran.in/cdn/farfuture/UsRAhtveqJT-2Jd755sB8gRRLFm2od6Us0oD-bmF69g/1671113184/sites/default/files/inline-images/n222524.jpg)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், ரவி, ஏ.ஜி. மனோகரன் இளங்கோ, செல்லபாலு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பு மற்றும் தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் 300-க்கும் மேற்பட்டவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளை ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அனைத்து பணப் பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சரியான நடவடிக்கை இல்லை என்றால் தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெறும் எனவும் கூட்டமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர்.